Tuesday, July 04, 2006
உயிர் பலி - - தியாகி
அழகு நிரம்பிய இந்த இளம் வயதில், எனக்கு மரணத்தை நிச்சயித்து, எமனுக்கு மனு எழுதிப்போட்டவர்கள் வேறு யாரு மல்ல...
என்னைத் தத்தெடுத்து வளர்த்து வருகிற பண்ணையாரும், பண்ணையாரம்மாவும் தான்!
தாடி முளையிட ஆரம்பித்து இளமையின் முதிர்ச்சி எட்டிப்பார்த்த வேளையில்...
பக்கத்து வீட்டு அம்முவின் மேல் எனக்கு காதல் வளரத் தொடங்கியது..
அம்முவை பார்க்கும்போதெல்லாம், என் மனம் பரவசத்தில் குதூகலிக்கும்! பல முறை எனது காதலை அவளிடம் தெரிவிக்க முயற்சியெடுத்தும் முடியாமல் போனது..
அவளுக்கும், என் மேல் ஆசையில்லாமலில்லை அதனால் அவளிடம் மனம் விட்டு பேசும் நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தேன்.. ஆனால், அந்த நாள் இனி வரப்போவதில்லை.. காலம் கடந்துவிட்டது.. நாளைதான் என் உயிருக்கு மட்டுமல்லாது எனது காதலுக்கும் சேர்த்தே சமாதி கட்டவிருக்கிறார்களே!
காலையில் பொழுது விடிந்தவுடன் கொல்ல வேண்டும்! வீட்டின் ஜன்னல் ஓரம் நின்றபடி பண்ணையார் ஓரு ஆளிடம் பேசிக்கொண்டி ருந்ததைக் காது கொடுத்துக்கேட்டேன்.. என் மனம் துவண்டு போய் விட்டது..
இந்த இரவு, எனக்கு கடைசி இரவு என்பது வெளிச்சமாகி விட்டது.
வீட்டில் பண்ணையார், பண்ணையாரம்மா, அவர்களது பிள்ளை என எல்லோரும் கருக்கலிலேயே குளித்துமுடித்து புதுத்துணி உடுத்தியிருந்தார்கள்! இன்னும் சற்று நேரத்தில் எனது உயிரைப் பறிக்க இருக்கும் பாதகச் செயல் நடக்க இருக்கிறது என்பதை அவர்கள் தீட்டிய ரகசிய சதிதிட்டம் உணர்த்தியது. அம்முவிடம் எனது காதலைத் தான் தெரிவிக்க முடியவில்லை.. அம்மு... இந்த உலகத்தை விட்டே நான் போறேன் என்ற கடைசித் தகவலைச் சொல்லிவிட்டாலாவது மனம் ஆறுதல் அடையும் போலிருந்தது... தப்பியோட முடிவு செய்து, கட்டியிருந்த கயிற்றை அறுத்துவிட முயற்சித்தேன்...
அதற்குள்... அவிழ்த்துக்கிட்டு வாங்க... என பண்ணையாரம்மா கூறவும், பண்ணையார் என்னருகில் வந்து கயிற்றை அவிழ்துக் கொண்டிருந்தார். தப்பிக்க முயற்சித்த எண்ணம் வெறும் எண்ணமாகவே இருந்து விட்டது.
இது வரை இந்த வீடே கதியென்றிருந்த என்னை வேறு எங்கோ கூட்டிச்செல்ல அழைத்தார்கள்.. எனது கால்கள் நடக்க மறுக்கவும் தரதர வென்று இழுக்க ஆரப்பித்தார்கள்... நான் தலையை திருப்பிக்கொண்டு கதறியவாறே அம்முவை அழைத்தேன்.. நான் அழைத்தது, கடைசியாக அவளிடம் விடை பெறுவதற்குத்தான்.. ஆனால், என் கண்களிருந்து அவள் மறையும் வரை நான் கதறியது அவள் காதில் விழவே இல்லை போலும்... இது வரை மனதில் தேக்கி வைத்திருந்த காதல், துக்கம் எல்லாம் அழுகையாய் வெடித்துக்கிளம்பியது.!
நீயாவது கடைசி வரை நல்லா வாழனும் மனதில் அவளை ஆசீர்வதித்தேன்..!
பண்ணையாரோடு சேர்ந்து வேறு சிலரும் என்னை இழுத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.. அவர்களில் ஒருவர் மற்றவரிடம் பேசிக்கொண்டதை வைத்து நான் எதற்காகக் கொல்லப்படபப்போகிறேன் என்பது விளங்கியது...
பண்ணையாருக்கு ரொம்ப வருசமா ஒரு தீராத நோய் இருந்தது... அது குணமாயிட்டா (என்னைக்காட்டி) முப்பாத்தம்மனுக்கு பலி கொடுக்கறேன்னு பண்ணை யாரம்மா நேர்ந்து விட்ருந்தாங்க! அவர்கள் கூறியது எனக்கு ஆச்சரியமளித்தது..
ஒரு உயிர் நன்றாக வாழ, மற்றொரு உயிரை அழிப்பதாக பேரம் பேசியிருக்கிறார்கள் முப்பாத்தம்மனிடம், அதுவும் சம்மந்தப் பட்ட என் அனுமதி யின்றி! என் உலகமே இவர் கள்தான் என்று என்னை நம்பவைத்தது இப்படிக் கழுத்தறுக்கத்தானா? மனம்; வெதும்பியது...
அடுத்தவரின் நலனுக்காக உயிரை விடப் போகும் நானும் ஒரு தியாகி- எனக்கு நானே பட்டமளித்துக்கொண்டேன்!
மேளதாளங்களின் ஓசை, அருகில் ஒலிக்க, ஒலிக்க என் உடலெங்கும் நடுக்கம் காணத்தொடங்கியது..
என்னை ஆட்டிப்படைத்த மரணபயத்தில் உங்களை மறந்தே விட்டேன்... நல்லவேளையாக ஞாபகம் வந்தது.. இவ்வளவு நேரம் என்னுடைய உணர்வுகளை மதித்துப்பகிர்ந்து கொண்ட உங்களுக்கு இன்னும் சற்று நேரத்தில் இழக்கப்போகும் தலையைத்தாழ்த்தி என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
இதோ நெருங்கி விட்டது... கோயில் மட்டுமல்ல எனது மரணமும்தான்!
ஐயோ... என்னைக் கொன்று விடாதீர்கள்... இரக்கம் காட்டுங்கள்... தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்... என்னும் அர்த்தத்தில், எனக்குத் தெரிந்த, ஒரே வார்த்தையும் ஒரே எழுத்தும் கொண்ட எனது மொழியில் "மே...மே...மே..." என மன்றாடினேன். மனிதருக்கு, மரணத்திற் குப்பின்மாலை! எனக்கோ, மாலை போட்டு மரணம்! வளர்த்த கடா மார்பில் பாய்கிறது என்பது சொல் வழக்கு! என்னைப் பொறுத்த வரை, வளர்த்தவர்களின் கத்தி தான் கடாவின் மேல் பாய்கிறது... பண்ணையா ரம்மாவுக்கு சாமியாட்டம் வந்து ஆடு ஆடென்று ஆடுகிறார்கள்.. ஆனால், நானோ அந்த நொடியில் ஆடாமல் அசையாமல் கிடந்தேன்!